பராமரிப்பற்ற கோவில் குளம்: ஆக்கிரமிப்பால் சுருங்கியது!
திருத்தணி: நாகலாம்மன் கோவில் அருகில் உள்ள குளம், உரிய பராமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்தும், புதைந்தும் வருகிறது. திருத்தணி, காந்தி நகர், நல்ல தண்ணீர் குளம் அருகில், நாகலாம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகில், 200 ஆண்டுகளாக, இரண்டு ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால், காந்தி நகர், முருகப்பா நகர், சுப்பராய மேஸ்திரி தெரு, கச்சேரி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இந்நிலையில், தற்போது குளத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருகின்றனர். தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு தான் குளம் உள்ளது. இதையும் உரிய முறையில் பராமரிக்காததால், குளத்தில் முட்செடிகள் மற்றும் தழைகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், கழிவுநீர் கலப்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களை கடிக்கிறது. இந்த குளத்தை துார்வாரி சீரமைத்தால், குளத்தில் தண்ணீர் வரும். மேலும் குடிநீர் தட்டுப்பாடும் தீரும். குளத்தை பராமரிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.