உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜராஜ சோழன் சதயவிழா நவ.,1ம் தேதி துவக்கம்!

ராஜராஜ சோழன் சதயவிழா நவ.,1ம் தேதி துவக்கம்!

தஞ்சாவூர், ;தஞ்சையில், மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழா நவம்பர், 1, 2ம் தேதிகளில் நடக்கிறது. விழா மேடைக்கான பந்தல் கால், நேற்று நாட்டப்பட்டது.தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில், கட்டிடக்கலை மற்றும் சிற்ப கலைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்கோவிலை கட்டி, தஞ்சைக்கு புகழ் சேர்த்தவர் முதலாம் ராஜராஜ சோழன். ராஜராஜ சோழன் பிறந்தது, முடிசூட்டியது ஐப்பசி சதய நாளில் என்பதால், ஆண்டுதோறும் இவரது பிறந்த நாள் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1,029வது சதய விழா வரும், 1, 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது.தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் நடைபெறவுள்ள விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் சுப்பையன் தலைமை வகிக்கிறார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே முன்னிலை வகிக்கிறார். சதய விழாக்குழு தலைவர் தங்கமுத்து வரவேற்கிறார். அமைச்சர், எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், ஹிந்துசமய அறநிலையத்துறை மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் உட்பட பக்தர்கள் ஏராளமானபேர் பங்கேற்க உள்ளனர்.

விழா நாட்களில், பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பூஜை மற்றும் வழிபாடு நடக்கிறது. கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், பரதநாட்டியம், தப்பாட்டம், சிலம்பம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சதய விழாவின் போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ராஜராஜசோழன் வாழ்க்கை வரலாறு குறித்த போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், அரண்மனை தேவஸ்தானம் மற்றும் சுற்றுலாத்துறையினர் இணைந்து செய்து வருகின்றனர். கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தென்னக பண்பாட்டு மையம், மாவட்ட கலை பண்பாட்டு துறை இணைந்து செய்து வருகிறது.சதய விழாவுக்காக தஞ்சை பெரியகோவில் வளாகத்தில், பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே முன்னிலையில், சதய விழாக்குழு தலைவர் தங்கமுத்து பந்தல்கால் நாட்டினார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், இணை ஆணையர் குமரதுரை உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !