உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோக நரசிங்க பெருமாள் கோயில் திருப்பணி வேலைகள் துவக்கம்!

யோக நரசிங்க பெருமாள் கோயில் திருப்பணி வேலைகள் துவக்கம்!

கம்பம் : உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயில் திருப்பணிகள் மேற்கொள்வதற்குரிய துவக்க விழா சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது. இதற்காக 20 லட்சம் ரூபாயை கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை வழங்கியது. உத்தமபாளையத்தில் 800 ஆண்டுகள் பழமையான யோக நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது.நரசிங்க அவதாரத்தை முடித்து சாந்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தந்த நிலையே யோக நரசிங்க பெருமாளாகும்.இது போல் தென் தமிழ்நாட்டில் கோயில் இல்லை. இந்த கோயிலில் திருப்பணிகள் செய்ய ஓம் நமோ நாராயாணா பக்த சபையினர் முடிவு செய்தனர். திருப்பணி துவக்கவிழா நேற்று காலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக பெருமாள் சன்னதியை இடித்து விட்டு கற்களை எடுத்து புதிதாக கட்டுவதற்கும், முன்பகுதியில் அலங்கார தோரண வாயில்கள் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்வதற்கும் கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை மற்றும் சென்னை பி.எல்.பி.,நிறுவனங்கள் சார்பில் 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. துவக்க விழாவில் முன்னதாக விஸ்வசேன பூஜை, வாஸ்து பூஜை, கோயிலில் உள்ள கிணற்றை மூடுவதற்குரிய கங்கா பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கங்கா பூஜையில் கிணற்றில் தாம்பலம்,தேங்காய் பழம், தங்கம் உள்ளிட்ட பல பொருள்கள் சிறப்பு பூஜைகள் செய்து போடப்பட்டன. இந்த பூஜைகளில் கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலரும்,சென்னை பி.எல்.பி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநருமான ரா.பாஸ்கர், அவரது துணைவியார் ரமணி, உத்தமபாளையம் பிடிஆர் பண்ணை விஜயராஜன், மதுரை வி.பி.ராஜேந்திரன், அவரது துணைவியார் கீதா, தங்கம் பிள்ளை, ராஜேந்திரன், கர்ணம் ஹவுஸ் ரவி, நகைக்கடை பழனிவேல்ராஜன்,பத்திர எழுத்தர் அய்யப்பன், கம்பம் மொட்டையாண்டி, மறவர் சங்க கூட்டமைப்பு தலைவர் துரைப்பாண்டியன், அய்யம்பெருமாள்,ஜோதிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிப்புத்தூர் பட்டாச்சாரியார்கள், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் குருக்கள் நீலகண்டன், பெருமாள் கோயில் குருக்கள் சீனிவாசன், கரூர் ஸ்தபதி கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !