கல்பாத்தி தேர்த்திருவிழாவில் ரதங்களின் சங்கமம்!
ADDED :4083 days ago
பாலக்காடு: பாலக்காட்டில் கல்பாத்தி தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘ரத சங்கமம்’ நேற்று கோலாகலமாக நடந்தது. பாலக்காடு கல்பாத்தியில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. முதல் நாளில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி, சுப்பிரமணியர், கணபதி சிலைகள், அலங்கரிக்கப்பட்ட தேரில் திருவீதி உலா வந்தன. இரண்டாம் நாளில் மந்தக்கரை, மகா கணபதி கோவில் தேரோட்டம் திருவீதிகளில் வலம் வந்தன. நேற்று மாலை 6.15 மணியளவில், பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் தேர், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவில் தேர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர்கள், தேர்முட்டியில் சங்கமித்தன. இந்த ‘ரதசங்கமத்தை’ காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.