உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவில்களில் கார்த்திகை தீப விழா!

சிவன் கோவில்களில் கார்த்திகை தீப விழா!

காரிமங்கலம்:காரிமங்கலம், மலைக்கோவிலில் நடந்த கார்த்திகை தீப திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காரிமங்கலம், அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்தாண்டும் கார்த்திகை தீப திருவிழா, நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை, 4 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.
காலை, 5 மணிக்கு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை, 6 மணிக்கு அருகில் உள்ள மலை உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து வாண வேடிக்கையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

காவேரிப்பட்டணம் அடுத்த, பெண்ணேஸ்வரர் மடத்தில் அமைந்துள்ள வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. அதிகாலை, 5 மணிக்கு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை, 6 மணிக்கு மஹா தீபமும் ஏற்றப்பட்டது.

தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், பாரதிபுரம் காசி விஸ்வநாதர் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அதிகாலையில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை, 6 மணிக்கு மஹாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !