மலைக்கோட்டையில் கார்த்திகை தீப விழா!
திருச்சி:திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் நேற்று மாலை மஹா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர்.நாடு முழுவதும் நேற்று மஹா கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாளர் கோவில் அருகே, 50 அடி உயர இரும்பு கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள செப்பு கொப்பரையில் ஆண்டுதோறும், கார்த்திகை தீபத்தின் போது மஹா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.நேற்று கார்த்திகை தீப விழாவையொட்டி, 1,000 லிட்டர் எண்ணெய், ஆறாயிரம் மீட்டர் திரி, 800 கிலோ எடை கொண்ட பருத்தி துணி கொண்ட மஹா தீபம், திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் அருகே ஏற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக நேற்று காலை மட்டுவார் குழலம்மைல தாயுமான ஈசர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து நேற்று மாலை, 5 மணிக்கு உற்சவ மூர்த்திகள், உச்சி மலை பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பிறகு, தீப, தூப, நிவேதனங்களுக்கு பின்ற உற்சவ மூர்த்திகள் முன்னிலையில் நேற்று மாலை, 6 மணிக்கு வாணவேடிக்கை முழங்க மலை மீது மகா தீபம் ஏற்றப் பட்டது.பிறகு, பஞ்சமூர்த்திகளின் மேள தாளங்களுடன் வீதிவலம் நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் கூடி நின்று ஸ்வாமி வழிப் பட்டனர். விழாவில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
கார்த்திகை தீபத்தையொட்டி திருவானைக்காவல் ஜம்பு கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி சன்னதிகள், குபேர லிங்கேஸ்வரர் சன்னதிகளில் இன்று இரவு சொக்கப்பனை எனப்படும் பரஞ்ஜோதி வழிப்பாடும் நடந்தது.