சபரிமலை தங்க அங்கி பவனி நாளை புறப்பாடு: 27-ம் தேதி மண்டல பூஜை!
சபரிமலை: சபரிமலையில் 27-ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. இதையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி நாளை (டிச.,23) புறப்படுகிறது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலபூஜை 27-ம் தேதி நடக்க உள்ளது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜையின் நிறைவு நாளில் இதுநடைபெறும். இந்நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973-ல் தங்கஅங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டல பூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டல பூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். பத்தனந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு 4 நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது.
சபரிமலை மாதிரியாக வடிவமைக்கப்பட்ட ரதத்தில் இருக்கும் அங்கிக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளிப்பர். காலை ஆறு மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பவனி புறப்படும். நாளை ஓமல்லுார் பகவதி கோயிலிலும், 24-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், 25-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கி டிச., 26-ம் தேதி மதியம் பம்பை வந்தடையும். அங்கு கணபதி கோயில் அருகில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும். மாலை 3 மணிக்கு தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும்.மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி தீபாராதனை நடைபெறும். டிச., 27-ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டபின், மகரவிளக்கு கால பூஜைக்காக 30-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கப்படும். அன்று வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. டிச.,31 அதிகாலை 3 மணிக்கு நெய்யபிஷேகம் நடைபெறும்.