உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் தங்க அங்கி இன்று வருகை: நாளை மண்டலபூஜை!

சபரிமலையில் தங்க அங்கி இன்று வருகை: நாளை மண்டலபூஜை!

சபரிமலை: சபரிமலையில் நாளை மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்காக ஆரன்முளாவிலிருந்து புறப்பட்ட தங்க அங்கி இன்று மாலை சன்னிதானம் வருகிறது.கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டலகாலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற பூஜைகளின் நிறைவாக நாளை மதியம் மண்டலபூஜை நடைபெறுகிறது. மண்டலபூஜை நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள், தங்க அங்கி காணிக்கையாக வழங்கினார். இந்த அங்கி கடந்த 23-ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து புறப்பட்டது. இந்த பவனி இன்று மதியம் ஒரு மணிக்கு பம்பை வந்தடைகிறது. அதன் பின்னர் பம்பை கணபதிகோயில் அருகே அங்கி பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும். மாலை மூன்று மணிக்கு பெட்டகத்தில் அங்கி வைக்கப்பட்டு ஐயப்பா சேவாசங்க தொண்டர்கள் மூலம் தலைச்சுமடாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும். மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வரும் அங்கிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்து அழைத்து வருவர். 6.15 மணிக்கு

18-ம் படி வழியாக சன்னிதானம் வரும் அங்கியை தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி ஆகியோர் வாங்கி நடை அடைத்து ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிப்பர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெறும். நாளை காலை 3.15 மணிக்கு தொடங்கும் நெய்யபிஷேகம் 11.30 மணிக்கு நிறைவு பெறும். 12.30 முதல் ஒரு மணிக்குள் உள்ள முகூர்த்தத்தில் மண்டலபூஜை நடைபெறும். நாளை இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்படும். அதன் பின்னர் மகரவிளக்கு கால பூஜைக்காக 30-ம் தேதி மாலை திறக்கும்.

அரவணை கட்டுப்பாடு நீக்கம்:
அரவணை உற்பத்தியில் ஏற்பட்ட குறைவு காரணமாக அரவணை வினியோகத்தில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஒருவருக்கு மூன்று டின் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்காலிக ஏற்பாட்டில் கூடுதலாக 40 ஆயிரம் டின் அரவணை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து உற்பத்தி அதிகமானது. இதை தொடர்ந்து நேற்று காலை ஒன்பது மணி முதல் அரவணை வினியோகத்திலிருந்த கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டது. பக்தர்கள் தேவைக்கேற்ப அரவணை வழங்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !