பழைமையான சிவன் கோயில் தேரை இயக்க கோரி முற்றுகை போராட்டம்
ADDED :4027 days ago
திருநெல்வேலி : நெல்லை வீரவநல்லூர் கோயில் தேரினை பழுதுநீக்கி தேரோட்டம் நடத்த வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில், மரகதாம்பிகை சமேத பூமிநாதசுவாமி கோயில் பிரசித்திபெற்றது. தாமிரபரணிக்கு அருகில் அமைந்துள்ள இக்கோயிலில் உள்ள பழமையான தேர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படவில்லை. தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோயிலின் தேரினை சரிசெய்து மீண்டும் தேரோட்டம் நடத்த வலியுறுத்தி இந்துமகா சபை அமைப்பினர் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் அமைப்பினர், கோயிலின் சன்னதியில் உட்கார்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை கைது செய்வதாக கூறி போலீசார் விடுவித்தனர்.