உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை தேரோட்டத்தில் பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தேர்!

தை தேரோட்டத்தில் பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தேர்!

தர்மபுரி:தர்மபுரி, குமாரசாமிபேட்டை, சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று காலை, பெண்கள் மட்டும், வடம் பிடித்து, தேரை நிலை பெயர்த்தனர்.

தர்மபுரி குமாரசாமிபேட்டை, சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த, 28ம் தேதி புற்று மண் எடுத்தல் நிகழ்ச்சியோடு துவங்கியது. நேற்று முன்தினம், விநாயகர் தேர் இழுக்கப்பட்டது.

அன்றிரவு, யானை வாகனத்தில் சிவசுப்பிரமணி ஸ்வாமி திருவீதி உலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹா ரதம் இழுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், காலை, 9 மணிக்கு, பெண் பக்தர்கள் மட்டும், தேரை வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை, 6 மணி முதலே, பக்தர்கள் அதிகளவில் திரண்டனர். 9 மணிக்கு நிலை பெயர்க்கப்பட்ட தேர், கோவில் முன், 9.15 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது.அப்போது, பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக, உப்பு, மிளகு ஆகியவற்றை தேரின் மீது தூவினர். தேர் நிலை நிறுத்தப்பட்ட பின், தேரில் அலங்கரிக்கப்பட்ட, சிவசிப்பிரமணிய ஸ்வாமி, வள்ளி,தெய்வானையை பக்தர்கள் வழிபட்டனர்.காலை, 8 மணி முதல் மதியம், 12 மணி வரை பக்தர்களுக்கு பாரி முனை நண்பர்கள் சார்பாக, அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை, 6 மணிக்கு, வண்ண விளக்குகளால், அலங்கரிப்பட்ட மஹா ரதத்தை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 7 மணிக்கு வாண வேடிக்கையும், 8 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும்
நடந்தது.இன்று (பிப்.,5) வேடர் பரி குதிரை வாகன உற்சவமும், நாளை காலை, 9 மணி முதல்,
10.30க்குள் கொடியிறக்கமும், இரவு, 10 மணிக்கு, பூப்பல்லாக்கு உற்சவம் நடக்கிறது. வரும், 7ம் தேதி இரவு, 8 மணிக்கு சயன உற்சவம், 9 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் தலைமையில் சிறப்பு பட்டி மன்றம் நடக்கிறது.ஏற்பாடுகளை செங்குந்தர் சிவனேய செல்வர்கள் மற்றும் ஹிந்து சமய அறநிலைத்துறையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !