நல்லாண்பிள்ளைபெற்றாள் கோவிலில் பங்குனிஉத்திர திருத்தேர்உற்சவம்!
செஞ்சி: நல்லாண்பிள்ளை பெற்றாள் திருமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சி ஒன்றியம் நல்லான்பிள்ளை பெற்றாள் திருமுருகன் கோவிலில் 72ம் ஆண்டு பங்குனிஉத்திர பெருவிழா கடந்த 24ம் தேதிகொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம்,அலங்காரம் செய்தனர்.நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 1 மணிக்கு சக்திவேல் ஊர்வலம் நடந்தது. மாலை 3 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. இன்ஸ்பெக்டர் கோட்டீஸ்வரன், வடம் பிடித்தலை துவக்கி வைத்தார்.
தேர் பவனியின் போது பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும்ஊர்வலம் வந்தனர். மாலை 4 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் திருக்கல்யாணஉற்சவம் நடந்தது. விழா குழுவினர் தேவராஜன், குமரவேல் கலந்து கொண்டனர்.அருவாள் குத்திய பக்தர் முருகப்பெருமானின் பக்தர்கள் அலகு குத்துவது, கடப்பாறை உருவுதல், மிளகாய் சாந்து அபிஷேகம், ஆணி பாதுகை அணித்து செல்வது என தீவிரமாக பக்தியை வெளிப்படுத்துவது வழக்கம்.
நல்லாண் பிள்ளை பெற்றாளைச்சேர்ந்த முருக பக்தர் ராஜி, தனது வாயில் வேலுக்கு பதிலாக அருவாளை சொருகி பக்தியை வெளிப்படுத்தினார். அத்துடன் உடல் முழுவதும் குத்துவாளை போன்ற கத்தியை சொருகி இருந்தார். இவரின்பக்தி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.