தோட்ட உற்சவத்தில் எழுந்தருளிய வரதர்
ADDED :3808 days ago
காஞ்சிபுரம்: தோட்ட உற்சவத்திற்காக, காஞ்சிபுரம் வேகவதி நதி தெருவில் அமைந்துள்ள மண்டபத்தில், நேற்று வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி தெரு பகுதியில் உள்ள தோட்ட மண்டபத்தில் எழுந்தருள்வது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை 5:00 மணியளவில் கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் புறப்பட்ட பெருமாள், காலை 7:00 மணியளவில் தோட்ட மண்டபத்தில் எழுந்தருளினார். நண்பகல் 1:00 மணியளவில், பெருமாளுக்கு ஒன்பது கலச அபிஷேகமும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. பின், நள்ளிரவு 12:00 மணிக்கு பூஜை, தீர்த்தம், ஜடாரி நடைபெற்றது. இரவு முழுவதும் தோட்ட மண்டபத்தில் தங்கிய வரதராஜ பெருமாள், இன்று அதிகாலை, விசேஷ அலங்காரத்தில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை சென்றடைந்தார்.