உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

திருத்தணி :திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நேற்று நடந்தது.
திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீ மிதி திருவிழா, கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினசரி மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பும், மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்தது.நேற்று, தீமிதி திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 9:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூ கரத்துடன் காப்பு கட்டி, விரதம் இருந்த, 13,500 பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். கனகம்மாசத்திரம் திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினசரி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், மதியம் 1:30 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு மகாபாரத நாடகமும் நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கிராம பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர்.

தொடர்ந்து, உற்சவர், அம்மன் சிறப்பு அலங்காரத்துடன், கிராம வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை, தருமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !