கன்னியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
மயிலம்: மயிலம் அடுத்த கள்ளகொளத்தூர் கன்னியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது. கள்ளகொளத்தூரில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களின் குலதெய்வம் கன்னியம்மன் சுவாமி. இந்த கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு வழிபாடு, தீபாரா தனை நடந்தது. கன்னியம்மன் உற்சவர் சிலையை, அருகில் உள்ள கிராமங்களுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மே 26ம் தேதி காலை 9:00 மணிக்கு கிராம எல்லையிருந்து பழங்குடி மக்கள் பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 4:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. இரவு 7.30 மணி பச்சை பந்தலில் கன்னியம்மனுக்கு படையல் நடந்தது. இரவு 8:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவில் தந்தை பிரசாமுண்டா மக்கள் சங்க மாநில தலைவர் ரவி, ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் மற்றும் மயிலம் பகுதியிலுள்ள பழங்குடி மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.