தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஆடி பெருக்கு விழா கோலாகலம்
அரூர்: அரூர் அடுத்த, டி.அம்மாப்பேட்டையில் உள்ள சென்னியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.அரூர் அடுத்த டி.அம்மாப்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், சென்னியம்மன் இக்கோவிலில், நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் வேலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஆற்றில் உள்ள பாறைகளுக்கு, பொறி, கடலை, அவல் உள்ளிட்டவைகளை தூவி பூஜை செய்து வழிபாடு செய்த பின்பு, ஆடு, கோழியை பலியிட்டனர். மேலும், தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் நீராடவும் சமைக்கவும், குடிநீருக்கும் மிகவும் அவதிப்பட்டனர். விலை கொடுத்து தண்ணீரை வாங்கினர் பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது. கழிப்பறை வசதியும் இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்ட போதிலும் தெண்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வராததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், விழாவுக்கு வந்த பக்தர்களிடம் இருகரம் மற்றும் நான்கு கர வாகனங்களுக்கு, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் என, சுங்க கட்டணம் என கூறி வசூல் செய்ததால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அரூரில் இருந்து டி.அம்மாப்பேட்டைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி, தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.