பழநி இடும்பன் மலைக்கோயில் கிரிவலப்பாதை அமைக்க திட்டம்!
பழநி: பழநி இடும்பன்மலை அடிவாரத்தை சுற்றி 3 கி.மீ.,துாரத்திற்கு கிரிவலப்பாதை அமைக்கப்பட உள்ளது.பழநியில் மலைக்கோயில் சக்திகிரி என்றும், இடும்பன் மலை சிவகிரி என அழைக்கப்படுகிறது. பழநிக்கு வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை வணங்கிவிட்டு பின் மலைக் கோயிலில் முருகனை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் வெளிமாநிலம், மாவட்ட பக்தர்கள் இடும்பன் மலைக்கு அதிகம் செல்கின்றனர். அதேசமயம் 3 கி.மீ., சுற்றளவு உள்ள மலையைச் சுற்றி முட்செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. பின்புறத்தில் குப்பை கொட்டுகின்றனர். வலதுபுறத்திலிருந்து ஏற்கனவே மலைகோயிலுக்கு செல்ல ரோடு உள்ளது. தற்போது இடதுபுறத்தில் பை-பாஸ் ரோட்டை இணைத்து புதிதாக கிரிவலப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பழநிகோயில் இணைஆணையர் ராஜமாணிக்கம், தாசில்தார் மாரியப்பன், சர்வேயர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடும்பன்மலை இடதுபுறத்தில் 40அடி அகல கிரிவலபாதை அமைக்க இடத்தை பார்வையிட்டு, கோயில்நிலம்போக குறைவாக உள்ளபகுதியில் புறம்போக்குநிலம், தனியார் நிலம் யார் பெயரில் உள்ளது என ஆவணங்களை ஆய்வுசெய்தனர். விரைவில் திட்ட மதிப்பீடு தயார்செய்து தைப்பூசத்திற்கு முன்னதாக கிரிவலப்பாதை அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.நெரிசலுக்குதீர்வு: இத்திட்டம் நிறைவேறினால் தென்மாவட்டங்களில் இருந்து பழநிவரும் சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்திற்கு வசதியாக இருக்கும், கிரிவலப்பாதையில் பக்தர்களின் வேண்டுதல்களில் ஒன்றான ராசிமரங்களை வைத்தால் இடும்பன் மலையை சுற்றி இயற்கையான ரம்மியமான சூழல் உருவாகும்பக்தர்கள் கிரிவலம் வரவசதியாக இருக்கும். விழாக்காலங்களில் பழநி மலைக்கோயில் கிரிவீதியை சுற்றிவரும் கனரக வாகனங்களினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்குறையும். எனவே இத்திட்டத்தை உடனே செயல்படுத்த, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.