மயிலம் முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா!
மயிலம்: மயிலம் முருகன் கோவி லில் ஐப்பசி மாத கிருத்திகை விழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் நேற்று முன்தினம், ஐப்பசி மாத கிருத்திகை விழா நடந்தது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், பாலசித்தர், நவகிரக சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர், மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மயிலம் அக்கினி குளம் அருகே ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து, அங்கப்பிரதட்சணம் செய்தனர். அலகு குத்தி நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் உற்சவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி செய்திருந்தார்.