பட்டாசு வெடிக்கும் போது ஜாக்கிரதை!
பட்டாசு வெடிக்கும் போது, சில விதிமுறைகளை கடைபிடிக்கும் போது எல்லோருக்கும் பாதுகாப்பு. அதற்கான சில ஆலோசனைகள்:
* பொது இடத்தில் வெடி வெடிக்கும்போது, மின் கம்பிகள், குடிசைகள், காகிதக் குப்பைகள், பட்டாசு கடைகள், கெரசின் கடை, பஞ்சு மூட்டை, ஆடையகம் போன்ற பகுதிகளில் வெடிக்கக்கூடாது. மீறி இதுபோன்ற பகுதிகளில் வெடிகளை வெடிக்கும் போது, மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதங்களும் ஏற்படும் அபாயம் உண்டு. வெடிகளை திறந்தவெளியில் வைத்து தான் வெடிக்க வேண்டும்.
* அம்மா, அப்பா அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களை, துணைக்கு அழைத்து கொண்டு, சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். எந்த வெடி வெடிப்பதாக இருந்தாலும், அதன் அருகில் உட்கார்ந்து கொண்டு வெடிக்க கூடாது. நீண்ட ஊதுபத்தி கொண்டு சற்று குனிந்து, வெடிக்கு அருகில், உங்களது முகத்தை வைக்காமல், சற்று தள்ளி உங்களது கையை மட்டும் நீட்டி வெடியின் திரியை பற்ற வைக்க வேண்டும். திரியில் சிறு தீப்பொறி தெரிந்தாலும் உடனே துார விலகி விட வேண்டும். புஸ்வாணம் கொளுத்தும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உட்கார்ந்து கொண்டு கொளுத்தக் கூடாது. தீக்குச்சி கொண்டோ, ஊதுபத்தி கொண்டோ, அவற்றை கொளுத்தக் கூடாது. கம்பி மத்தாப்புகளை மட்டுமே பயன்படுத்தி கொளுத்த வேண்டும். கொளுத்திய உடனே, துார விலகி விட வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது உங்களை யாராவது பயமுறுத்துபவர்கள் அருகில் இருந்தால், அவர்களை பயமுறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டும் அல்லது அவர்கள் இல்லாத நேரமாக பார்த்து, உங்களது பயமுறுத்தாத பெரியவர்களின் துணை கொண்டு வெடிகளை வெடிக்க வேண்டும்.
* ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கும் போது, வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது ஏதேனும் திறந்த வெளியில் ஒரு கண்ணாடி பாட்டிலினுள் நிற்க வைத்து கொளுத்த வேண்டும். அட்டைப் பெட்டியிலோ அல்லது கைகளில் பிடித்துக்கொண்டோ அல்லது கொட்டாங்குச்சியில் வைத்தோ வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
* வெடி வெடிக்கும்போது, எந்த ஒரு உணவையும் சாப்பிட வேண்டாம். சாப்பிடுவதாக இருந்தால், உங்களது கைகளை நன்றாக கிருமி நாசினி கொண்டு சுத்தமாக கழுவி, அதற்கு பின் சாப்பிட வேண்டும்.