33 ஆண்டுக்கு பின் நடந்த ஓலைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா
சேந்தமங்கலம்:கடந்த, 33 ஆண்டுகளுக்கு பின், சேந்தமங்கலம் அடுத்த எலுவம்பட்டி ஓலைப்பிடாரி அம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. சேந்தமங்கலம் அடுத்த பழையபாளையம், எலுவம்பட்டி கிராமத்தில் ஓலைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் ஊர் பிரச்னை காரணமாக தேர்த்திருவிழா நிறுத்தப்பட்டது.இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பின் கோவில் தேர்த்திருவிழா நடத்த கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த, 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.கடந்த, 25ம் தேதி ஓலைப்பிடாரி அம்மனுக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 26ம் தேதி மாலை வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு ஸ்வாமி தேரில் எழுந்தருளினார்.அதை தொடர்ந்து, பக்தர்கள் தேர் ஊர்வலம் நடந்தது. இரவு 7 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு ஸ்வாமி தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு, எள்ளு சோறு எடுத்துக்கொண்டு பூஜாரி மற்றும் பரம்பரை பூசாரி ஆகியோர் வீதியை சுற்றி வந்தனர்.இந்த நிகழ்ச்சியின் போது கர்ப்பிணி பெண்கள், தீட்டு ஏற்பட்ட பெண்கள் யாரும் ஊருக்குள் இருக்கக் கூடாது என்பது ஐதீகம். அவர்கள் பக்கத்து கிராமத்துக்கு சென்றுவிடுவர். அதன்படி, நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் பக்கத்து கிராமத்துக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் சென்று விட்டனர். அதை தொடர்ந்து, ஊமை பலி கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.இன்று (ஜூலை 28) காலை 8 மணிக்கு, பொங்கல் பூஜையும், ஸ்வாமி திருவீதி உலா வரும்போது கொண்டு வெட்டியாரால் பலி பூஜை, அவரவர் வீட்டில் செய்து தரப்படுகிறது. நாளை (ஜூலை 29) இரவு 8 மணிக்கு, பழையபாளையம் பகவதியம்மன் கோவில் திடலில் வாணவேடிக்கை நடக்கிறது.ஜூலை 30ம் தேதி காலை 10 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், ஸ்வாமி திருவீதி உலா முடிந்தபின் பலி பூஜையும் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு, வாணவேடிக்கையும், கரகம் குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதை தொடர்ந்து 8 நாட்களுக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது.ஆகஸ்ட் 7ம் தேதி, உதிரவாய் துடைத்தல் நிகழ்ச்சியும், 8ம் தேதி சிறப்பு பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.