500 ஆண்டுகள் பழங்கால செப்பு பொருட்கள் கண்டெடுப்பு
ADDED :3654 days ago
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே, விவசாய நிலத்தில் கிடைத்த, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்புப் பொருட்கள், நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டன. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குப்பநத்தத்தைச் சேர்ந்த காசிராஜன், 65, அதே பகுதியில், ரயில் பாதையை ஒட்டி தன் நிலத்தில் பலா கன்றுகள் நட, ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டிய போது, பழங்கால செப்புப் பொருட்கள் கிடைத்தன.அதில், செப்புக் கிண்ணங்கள், 13; உடைந்த மண் கிண்ணம், 1; உடைந்த சிறிய இரும்புச் சங்கிலி, 1; கொக்கி, 1; உருளை வடிவ குமிழ்கள், 3; திறந்த குமிழ், 1, ஆகியவை கிடைத்தன.தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள், அப்பொருட்களை கைப்பற்றி, கடலுார் தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.