திருத்தணி முருகன் கோவிலில் சஷ்டி விழா துவக்கம்!
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில், கந்த சஷ்டி, புஷ்பாஞ்சலி மற்றும் லட்சார்ச்சனை விழாக்களை, கோவில் தக்கார் நேற்று துவக்கி வைத்தார். திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான கந்த சஷ்டி விழாவை, நேற்று, காலை 10:00 மணிக்கு, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். மலைக் கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணி வரை, உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, லட்சார்ச்சனை நடந்தது. முன்னதாக காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு காலசந்தி, உச்சிக்கால பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தன. இன்று முதல், 17ம் தேதி வரை, காலை 8:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, உற்சவருக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. வரும், 17 ம் தேதி மாலை 5:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, உற்சவருக்கு புஷ்பாஞ்சலியும், 18ம் தேதி காலையில் திருக்கல்யாண உற்சவமும் நடக்க உள்ளன.