சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நேற்றுமுன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு, திருநீறு போன்றவைகளால் அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின், உற்சவ மூர்த்தி நந்தி வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரியகளந்தை ஆதிஸ்வரன், தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலங்கண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில் போன்ற கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.