பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோயிலில் நள்ளிரவில் நடை திறப்பு!
தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை அடுத்த பரக்கலக்கோட்டையில் பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சோமவார திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடந்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும். சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும். வெண் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மத்தியஸ்தம் செய்ததால் வெண் ஆலமரமே ஸ்தல விருச்சமாக வணங்கப்படுகிறது. மரத்தின் வேரில் சந்தனம் பூசி, அதன் மேல் நெற்றிப்பட்டம், நாசி, திருவாய், முன்புறம் திருவாய்ச்சி அமைத்து சிவலிங்க வடிவில் இருப்பதை பக்தர்கள் வழிபட்டனர். சோமவார திருநாள்களில் மரத்தின் இலைகளை பக்தர்கள் பறித்து செல்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டு விழாவின் முக்கிய நிகழ்வான வரும் டிச.14 ம் தேதி கடைசி சோமவார தினத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் விசேஷ பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு. தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது. கடந்த நவம்பர் 23ம் தேதி முதல் சோமவார திருவிழா நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 21ம் தேதி விடையாற்றி உற்சவ விழா நடைபெறுகிறது. வருடத்தில் ஒருநாள் பொங்கல் பண்டிகைய ன்று மட்டும் பகலில் நடை திறந்திருக்கும். விழாவிற்கு தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுமார் 5 லட்சத்திற்கும் மேற் கலந்துக்கொண்டு, தங்கள் கொண்டு வரும் நவதானிங்கள், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தி வழிபடுவர்கள். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர்கள் சடகோபராமானுஜம், ராமானுஜம் மற்றும் பரக்கலக்கோட்டை கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.