பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!
உளுந்துார்பேட்டை: பாதுார் பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலா யாகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில், கார்த்திகை மாத அமாவாசை நிகும்பலா யாகம் நேற்று நடந்தது. காலை 10:30 மணிக்கு, யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் 5 குருக்கள் வேத மந்திரங்களை முழங்க, யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் சேர்ப்பிக்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்ற கோரி, வெற்றிலையில் எழுதி யாக குண்டத்தில் சேர்ப்பித்தனர். ஏராளமான புடவை மற்றும் துணிகள் சாற்றப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு பழ வகைகள், பால், தயிர், நெய் போன்றவையும் யாக குண்டத்தில் சேர்ப்பித்து, தீபாராதனை நடந்தது. முன்னதாக, பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகும்பலா யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.