அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்
அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா மஹா தரிசன விழா, காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜ பெருமான், சிவகாமி அம்மைக்கு, ஆருத்ரா மஹா தரிசன விழா நடைபெறும். நடப்பாண்டு, நேற்று துவங்கி, 26 வரை நடக்கிறது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில், ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பின், நடராஜ பெருமான், சிவகாமியம்மை, திருவாதிரை நாச்சியார், மாணிக்கவாசகர் ஆகிய மூர்த்திகளுக்கு, சிறப்பு வழிபாடு, திருவெம்பாவை மற்றும் வேத பாராயணத்துக்கு பின், காப்புக்கட்டும் வைபவம் நடந்தது. அலங்கார தீபாராதனைக்கு பின், மாணிக்கவாசகர், வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 26 வரை தினமும், அதிகாலை மற்றும் மாலையில், மாணிக்கவாசகர் வீதியுலா, 25ல் மாங்கல்ய நோன்பு நடைபெறுகிறது.