உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆய்வு

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆய்வு

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் லஞ்ச ஒழிப்பு துறையினர், நேற்று ஆய்வு செய்தனர். கோவையில் பழமையான கோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும் ஒன்று. இங்கு, தற்காலிக பணியாளர் மற்றும் நிரந்தர பணியாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் உரிய கல்வித்தகுதியின்றியும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமலும் பணியில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, கடந்த அக்., மாதம் போலி பணி நியமன ஆணை வாயிலாக பணியில் சேர்ந்த, இருவரை கோவில் நிர்வாகம், டிஸ்மிஸ் செய்தது; போலியாக தயாரிக்கப்பட்ட மாற்றுச்சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மேலும் இருவரை சஸ்பென்ட் செய்தனர். இருப்பினும், கோவிலில் மேலும் பலர் உரிய கல்வித்தகுதியின்றி, பணியில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களை கோவில் நிர்வாகிகள் காப்பாற்றி வருவதாகவும் புகார் எழுந்த வண்ணம் இருந்தது.

இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் ஒருவர் கோவை லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், நேற்று காலை, 10:00 மணிக்கு கோவை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு, கோவில் துணை கமிஷனர் கார்த்திக் முன்னிலையில், ஊழியர்கள் பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். மதியம், 2:00 மணி வரை நடந்த இந்த ஆய்வில், முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்ததாக, கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன. பேரூர் கோவில் துணை கமிஷனர் கார்த்திக் கூறுகையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கோவிலுக்கு ஆய்வுக்காக வந்தது உண்மை. அவர்கள் ஒரு சில ஆவணங்களை சரி பார்ப்பதற்காக வந்தனர். மேலும், அவர்களுக்கு தேவையான ஆவணங்களை பெற்றுச்சென்றனர், என்றார். லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ஊழியர் நியமனம் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், ஆவணங்களை ஆய்வு செய்தோம். ஒரு சில ஆவணங் கள் இல்லாததால், அவற்றை விரைவில் தரக்கோரி கடிதம் கொடுத்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !