ராஜநாகலட்சுமி கோவிலில் வளைகாப்பு திருவிழா
மோகனூர்: மோகனூர், ராசிபாளையம் ராஜநாகலட்சுமி கோவிலில், ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு வளைகாப்பு திருவிழா நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மோகனூர், ராசிபாளையம் மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று வளைகாப்பு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டு கருட பஞ்சமி, நாக பஞ்சமி ஹோமம் பெருவிழா மற்றும், 10ம் ஆண்டு வளைகாப்பு திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை காலை 6 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து காலை 7 மணிக்கு, ஸ்தல புண்ணியவானும், கோ பூஜை, 8 மணிக்கு பிரம்மச்சாரி, சுமங்கிலி மற்றும் கன்னிகா பூஜையும், 9 மணிக்கு ஹோமங்கள் ஆரம்பமானது. பகல் 12 மணிக்கு ஸ்வாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், கோவிலில் உள்ள புற்றுக்குள் வளையல் உள்ளிட்ட பூஜை பொருட்களை போட்டு வழிபட்டனர். அதையத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இப்பூஜையில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ராஜநாகலட்சுமி அம்மன் அறங்காவலர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் மக்கள் செய்தனர்.