உடுமலை ஆல்கொண்டமால் கோவில் திருவிழா
உடுமலை : உடுமலை அருகே, பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் (மால கோவில்) திருவிழா, ஜன., 16ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட சோமவாரப்பட்டியில் அமைந்துள்ளது, ஆல்கொண்டமால் கோவில். உடுமலை சுற்றுப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில், விவசாயிகள் தங்கள் கால்நடைகளின் நலன் வேண்டி வழிபாடு நடத்துகின்றனர். இதற்கென தமிழர் திருநாள் திருவிழாவாக, இக்கோவில் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது, கால்நடைகளின் உருவ பொம்மைகளை வைத்து, விவசாயிகள் வழிபடுகின்றனர். திருமால் எழுந்தருளியுள்ள இக்கோவில் பகுதியில், சுயம்பாக உருவான லிங்க வடிவ புற்றுக்கு, மாடுகள் பால் சொரிந்தது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழா, ஜன., 16 முதல், 18ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
விழா, 16ம் தேதி காலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன் துவங்குகிறது. காலை, 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, உழவர் திருநாள் சிறப்பு பூஜையும் நடக்கிறது. 17ம் தேதி காலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், 11:00 மணிக்கு, சிறப்பு பூஜையும் நடக்கிறது. 18ம் தேதி, காலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு, மகா அபிேஷகத்தை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்படுகிறது. இரவு, 7:00 மணிக்கு, மகா தீபாராதனையும், இரவு 9:00 மணிக்கு, சுவாமி வீதியுலா, வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது.வீதியுலா நிறைவில், சுவாமிக்கு மகா தீபாராதனை செய்யப்படுவதுடன், திருவிழா நிறைவு பெறுகிறது. உடுமலை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்இருக்குமென்பதால், கோவில் பகுதியில், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி, பஸ் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அறநிலையத்துறை, போலீசார், வருவாய்த்துறை மற்றும் ஊர்பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.