வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
புதுச்சேரி அருகே வைத்திக்குப்பம் கடற்கரையில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான சுவாமிகள், கடற்கரையில் எழுந்தருள செய்து தீர்த்தவாரி நடக்கிறது. இப்பெரு விழா நடப்பதற்கு, வரதராஜ பெருமாள் கோவில் கோதண்டராமரே காரணம்.வைத்திக்குப்பம் கடற்கரையில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய கருங்கல் தொட்டி கரை ஒதுங்கியது. அதில் ஸ்ரீ ராமர், சீதாபிராட்டி, லட்சுமணன், அனுமன், நவநீத கிருஷ்ணன், சந்தானகிருஷ்ணன், வேணுகோபாலன், சக்கரத் தாழ்வார் சுவாமி விக்ரகங்கள் பாதுகாப்பாக வைத்திருந்தனர். அப்பகுதியினர் இந்த விக்ரங்கங்களை வரதராஜ பெருமாள் கோவிலில் ஒப்படைத்தனர். வரதராஜபெருமாள் கோவிலில், வடக்கு பகுதியில் தனி கோவில் எழுப்பி, ராமர், சீதாபிராட்டி, லட்சுமணன், அனுமன் ஆகியோரை வைத்து வழிபாடு செய்தனர். 1893ம் ஆண்டு புதுச்சேரி கலவை கிருஷ்ணசாமி செட்டியார் என்பவர் திருக்கோவிலுக்கு ஜீர்ணோத்தரமும், ராமனுக்கு திருமண கைங்கரியமும், வெள்ளி கருட வாகனமும் செய்து அளித்தார். பின், புதுச்சேரி ரத்தின வியாபாரியான கோவிந்த செட்டியார், ஆன்மிக அன்பர்கள் உதவியுடன் கருங்கல் கோதண்டராமர் சிலை செய்து, 1914ம் ஆண்டு பிரதிஷ்டை செய்தார். அதற்கு தங்கக்கவசம் அளித்ததோடு, வரதராஜபெருமாள் சந்நதியிலும் சம்ப்ரோஷணம் நடந்தது. ஸ்ரீராமர் உள்ளிட்ட விக்கிரங்கள் கிடைத்த வைத்திக்குப்பம் கடற்கரையில், மாசிமக விழா நடத்த மக்கள் விரும்பினர். இதனால் 1902ம் ஆண்டு முதல் மாசிமக திருவிழா துவக்கி, இன்றும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.