உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றுத் திருவிழா சுவாமிகளுக்கு தீர்த்தவாரி!

ஆற்றுத் திருவிழா சுவாமிகளுக்கு தீர்த்தவாரி!

கடலுார்: கடலுார், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் ஆற்றுத் திருவிழாவையொட்டி சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. ஏராளமானோர் ஆற்றில் குவிந்தனர். கடலுார் பெண்ணையாற்றில் பாடலீஸ்வரர், வண்டிப்பாளையம் சுப்ரமணியர், மஞ்சக்குப்பம் முத்துமாரியம்மன், ஆனைக்குப்பம் நாகவள்ளியம்மன், தாழங்குடா மாரியம்மன் என, 20க்கும் மேற்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடந்தது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறுவர்கள் விளையாடி மகிழ ராட்டினம் உட்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பண்ருட்டி: பண்ருட்டி கெடிலம், கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழாவில் பண்ருட்டி படைவீட்டம்மன், மாளிகைமேடு, பிள்ளையார்க்குப்பம், கட்டமுத்துப்பாளையம், தட்டாம்பாளையம், மேல்குமாரமங்கலம், புலவனுார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட உற்சவர் சுவாமிகளுக்கு சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.  சுற்றுப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில் ஜெயன்ட் வீல் மற்றும் சிறுவர்கள் விளையாடும் ராட்டினங்கள் மற்றும் தற்காலிக கடைகள் அதிகளவில் போடப்பட்டிருந்தன. நெல்லிக்குப்பம்: முள்ளிகிராம்பட்டு பெண்ணையாற்றில் கடந்த சில ஆண்டுகளாக ஆற்று திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க நேற்று அதிகளவு போலிசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஆனால் மக்கள் பயந்து கொண்டு அதிகம் வரவில்லை. இதனால், ஆற்று திருவிழாவில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கூட்டம் வரும் என்ற நம்பிக்கையில் கடைகள் போட்டிருந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !