உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி: கோயில் கருவறைக்குள் வரும் பாம்பு!

திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி: கோயில் கருவறைக்குள் வரும் பாம்பு!

திருநெல்வேலி: நெல்லை அருகே இருந்து திருச்செந்தூர் முருகன்கோயிலுக்கு சர்ப்பக்காவடி எனப்படும் பாம்புக்காவடியை பக்தர்கள் எடுத்துச்சென்றனர்.

தமிழகத்திலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் முருகக்கடவுளின் தலங்களில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச விழாவில், பாதயாத்திரையாக செல்வதும், அலகு குத்தி செல்வதும்,காவடிகள் எடுத்துச்செல்வதும்தான் பிரதானமானவையாகும். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, சந்தனக் காவடி, தீர்த்தக் காவடி, அபிஷேகக் காவடி, மயில் காவடி, பறவைக் காவடி என பல்வேறு காவடிகளை தூக்குகின்றனர். இன்னொரு முக்கிய காவடி சர்ப்பக்காவடியாகும். நெல்லையை அடுத்துள்ள தெற்குகாரசேரி என்னும் கிராமத்தில் அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரநாதர் கோயிலில் இருந்து முருகபக்தர்கள் திருச்செந்தூர் முருகன்கோயிலுக்கு காவடிஎடுத்துச்சென்றனர். இதில் உச்சிமாகாளி என்னும் பக்தர், சர்ப்பக்காவடி  எடுத்துச்சென்றார்.

இதுகுறித்து அக்கோயில் பூஜாரி கணேசன் கூறுகையில், கடந்த இரண்டுஆண்டுகளாக இந்தகோயிலில் இருந்து சர்ப்பக்காவடி எனப்படும் பாம்பு காவடி எடுக்கப்படுகிறது. கோயிலில் சுவாமி கருவறையில் ஒரு கண்ணாடிப்பெட்டியை வைக்கின்றனர். அந்த பெட்டிக்குள் ஒரு நல்லபாம்பு தானாகவே வந்துஉட்கார்ந்துகொள்கிறது. இதனை பக்தர் உச்சிமாகாளி சுமந்துசெல்கிறார். தைப்பூசத்தன்று இதனை திருச்செந்தூர் கடற்கரையில் விட்டுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு கருநாகப்பாம்பு கண்ணாடி பெட்டிக்குள் வந்து உட்கார்ந்தது.இந்த ஆண்டு வெள்ளை நாகப்பாம்பு வந்துள்ளது. வித்தியாசமான சர்ப்பக்காவடியை பார்க்க சிறுவர்,சிறுமியர் பெண்கள் என பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கூடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !