திருத்தணி முருகன் கோவில்ராஜகோபுரம் கட்ட நிதியுதவி வழங்குங்கள்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டுவதற்காக பக்தர்கள் நிதியுதவி வழங்கக் கோரி, ஒவ்வொரு நிலைக்கும் ஆகும் செலவு தொகையை
பட்டியலிட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில், 2009 நவம்பரில், 3.60 கோடி ரூபாய் செலவில், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு அடிக்கல் நாட்டும் பணி துவங்கியது. ஆனால் பல பிரச்னைகளால் அவ்வப்போது பணிகள் நிறுத்தப்பட்டன.
விலகல்:கடந்தாண்டு பிப்ரவரில், 32 அடி உயர கல்காரப் பணிகள், 2 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டன.மீதமுள்ள, 1.60 கோடி செலவில், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு, முதற்கட்டமாக முதல்நிலை கட்டுமானப் பணி துவங்க இருந்த நிலையில் மீண்டும் நிறுத்தப்பட்டது.
டெண்டர் எடுப்பதில் பிரச்னை ஏற்பட்டு ஒப்பந்ததாரர் விலகிவிட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கோவில் நிர்வாகம், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான டெண்டர் எடுக்க பத்திரிகைகளில் இருமுறை விளம்பரம் வெளியிட்டும் எந்த ஒப்பந்ததாரரும் வரவில்லை. இதையடுத்து மூன்றாவது முறையாக வெளியிட்ட டெண்டர் விளம்பரத்தை பார்த்து, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் டெண்டர் எடுத்து பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து கோவில் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார்.இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில், ஒன்பது நிலைகளுக்கும் தனித்தனியாக மதிப்பீடு தயார் செய்து திட்ட மதிப்பீடு வழங்குமாறு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜகோபுரத்திற்கு நிதியுதவி அளிப்பவர்களுக்கு வரி விலக்கும் உண்டு என, மலைக்கோவிலில் விளம்பர பலகை வைத்துள்ளனர்.
பரிந்துரை: இதுகுறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராஜகோபுரம் கட்டுவதற்கு ஒருவர் டெண்டர் எடுத்து மதிப்பீடு தயார் செய்து கொடுத்துள்ளார். அது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆணையர் ஒப்புதல் அளித்தவுடன் துரித வேகத்தில் பணிகள் நடைபெறும் என்றார். மேற்காணும் பணிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமானவரி சட்டப்பிரிவு 80ஜி-யின் படி வருமான வரி விலக்கு அனுமதிக்கப்படும். தொலைபேசி எண்: 044-27885247