வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!
புதுச்சேரி: வாழ்வில் துன்பம் வரும்போது மட்டுமே கடவுளை நினைக்கிறோம்; இன்பம் வரும்போது நினைப்பதில்லை’ என, மாதா அமிர்தானந் தமயி தேவி பேசினார். புதுச்சேரி, லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லுாரி மைதானத்தில், மாதா அமிர்தானந்தமயி தேவியின் சத்சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசன நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் நமச்சிவாயம், கல்யாணசுந் தரம், விஸ்வேஸ்வரன், பிரெஞ்சு துாதர், அரசு செயலாளர் ராகேஷ்சந்திரா, பா.ஜ., தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் வரவேற்று பேசினர். அதனைத் தொடர்ந்து, மாதா அமிர்தானந்த மயி தேவி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின்னர், பஜனை, தியானம் நடந்தது. இரவு 10:30 மணிக்கு மேல், மாதா அமிர்தானந்த மயி பக்தர்களுக்கு தரிசனம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, மாதா அமிர்தானந்தமயி தேவி பேசியதாவது: பட்டினியால் உலக முழுவதும் தினமும் 22 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றன. பாத பூஜைகள் செய்வதை விட, மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள சாக்கடைகளையும், பிறருடைய துன்பங்களையும் துடைக்க முன் வரவேண்டும். சில வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாவில் அருளாசி வழங்கியபோது, திடீரென மின்சாரம் தடைபட்டது. அப்போது செய்வதறியாமல் நின்ற பக்தர்களில், ஒரு பெண் தனது மொபைல்போன் மூலம் வெளிச்சம் கொடுத்தார். அதைப் பார்த்த மற்றவர்களும், தங்கள் மொபைல் போனை எடுத்து வெளிச்சம் ஏற்படுத்தினர். அரங்கமே வெளிச்சத்தில் மிதந்தது. அதுபோல், நம் அைனவருடைய மனதிலும் அன்பு மற்றும் நம்பிக்கை என்ற தீபங்களை ஏற்றி, ஒற்றுமையுடன் இணைந்து முன்னேறினால் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்த முடியும். உலகில் இன்பங்களை அடைவதற்காக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒவ்வொருவரும் நான்கு கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். முதலில், நன்னெறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வியறிவை பெற வேண்டும். பண்பாட்டை புறக்கணிக்காத நாகரிகமும், இயற்கையை புறக்கணிக்காத வளர்ச்சி, உடல் நலத்தில் கவனம் உள்ளிட்டவைகளை கடைபிடித்து வாழ்ந்தால், பூமியை சொர்க்கமாக மாற்றலாம். வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சமமாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே வாழ்க்கை முழுமை பெறும். துன்பம் வரும்போது மட்டுமே கடவுளை நினைக்கிறோம். இன்பம் வரும்போது நினைப்பதில்லை. வாழ்க்கையில் ஆன்மிக பயிற்சிகளை கடைபிடிக்க வேண்டும். பக்தி, விருப்பத்தின் அடிப் படையில் தான் இருக்கிறது. இவ்வாறு, மாதா அமிர்தானந்தமயி பேசினார்.