மேட்டுப்பாளையம் அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், பிப்.,21 காலை வேத மந்திரங்கள் முழங்க அரங்கநாதப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பிப்.,22 மாசிமகத் தேரோட்டம் நடக்கிறது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதப் பெருமாள் கோவில். இங்கு மாசிமகத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன் தினம் பெட்டத்தம்மன் மலையில் இருந்து, ஸ்ரீரங்கநாயகி நாச்சியார் அம்மனை, கோவிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது, அர்ச்சகர், ராமபாணம் என்ற அம்பை, நான்கு ரதவீதிகள் வழியாக கையில் சுழற்றி வந்தார். பிப்.,21, அதிகாலை, 4:00 மணிக்கு உற்சவ மூர்த்தி அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருமண அலங்கார கோலத்தில், மண்டபத்துக்கு எழுந்தருளினார். அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. புண்ணியவாகம் முடிந்த பிறகு, பெருமாளுக்கு பூணுால் அணிவித்து, சுவாமிகளுக்கு கங்கணம் கட்டிய பின், அர்ச்சகர்கள் சுவாமிகளின் குலம் வாசித்தனர். மஞ்சள் இடிக்கும் சடங்கு முடிந்த பிறகு, மாங்கல்ய பூஜை செய்து, ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அர்ச்சகர்கள் மாலையை
கையில் பிடித்தபடி ஆடிப்பாடி வந்து, சுவாமிகளுக்கு மாலை மாற்றும் சடங்குகள் நடந்தன.
திருமணக்கோலத்தில் இருந்த சுவாமிகளின் முன்பு, ஆண்டாள் நாச்சியார் அருளிய வாரணமாயிரம் வாசிக்கப்பட்டது. அதன்பின், நெல்பொரியிடுதல் நிகழ்ச்சிக்கு பிறகு, சாற்றுமுறை ஆசீர்வாதமும், பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதமும் வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியை கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, சுதர்சன் பட்டர், ஸ்ரீதர் பட்டர், சுரேஷ் நாராயணன், கிருஷ்ணன், திருவேங்கடம் உட்பட 20க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதப் பெருமாள், திருமணக்கோலத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு, தாலிக் கயிறு, மஞ்சள் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மிராசுதாரர்கள், கட்டளைதாரர்கள், முக்கிய
பிரமுகர்கள், பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இன்று (பிப்.,22) தேரோட்டம்: பிப்.,22 அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து மதியம், 3:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கைலாஷ், மேலாளர் ராமராஜ் மற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.