ஏகாம்பரநாதர் பக்தர்கள் மகிழ்ச்சி: பங்குனி திருவிழாவில் பழைய உற்சவர் சிலை!
ADDED :3849 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இந்த ஆண்டின் பங்குனி உத்திர திருவிழாவின் போது, தற்போதுள்ள உற்சவர் சிலையே, வீதி உலாவுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலை சிதிலம் அடைந்துள்ளதாகவும், அதனால் அந்த சிலையை உற்சவத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், அறநிலையத் துறை சார்பில் கூறப்பட்டது; அந்த சிலைக்கு பதிலாக புதிய சிலை செய்ய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதற்கு கோவில் உபயதார்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவின் போது, தற்போது உள்ள உற்சவர் சிலையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.