திருப்பூர் பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
ADDED :3526 days ago
திருப்பூர் : திருப்பூர் பகுதியில், ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. வட மாநிலத்தவர்களின் கொண்டாட்டங்களில், ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. பின்னலாடை நகரான திருப்பூரில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி, நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். தங்கள் பண்டிகைகளை திருப்பூரிலேயே கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கு வசிக்கும் வட மாநிலத்தவர்கள், தங்களது குடும்பத்தினரோடு ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.ராயபுரம், காதர்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து, ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து மகிழ்ந்தனர்.