திருப்பதி சீனிவாசமங்காபுரம் கோவிலில் 7 டன் மலர்களால் யாகம்!
ADDED :3683 days ago
திருப்பதி: திருப்பதி அடுத்துள்ள சீனிவாசமங்காபுரம், வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், புஷ்ப யாகம் விமரிசையாக நடந்தது. திருப்பதியில் இருந்து, 10 கி.மீ., தொலைவில், தேவஸ்தானத்துக்கு சொந்தமான, சீனிவாசமங்காபுரம், கல்யாண வெங்டேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும், பங்குனி மாதம் நடக்கும், ஆண்டு, புஷ்ப யாகம், நேற்று நடந்தது. அதற்காக, காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு, ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. பின், கோவில் மண்டபத்தில் எழுந்தருளிய, உற்சவ மூர்த்திகளுக்கு, சாமந்தி, மல்லி, சம்பங்கி, ரோஜா, தவனம், தாமரை, கனகாம்பரம், அரளி, தாழம்பு உள்ளிட்ட, ஏழு டன் மலர்கள் மற்றும் துளசி, வில்வம் ஆகியவற்றால் அர்ச்சனை செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.