மீனாட்சியம்மன் கிளி ரகசியம்!
ADDED :3593 days ago
மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு, கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். மீனாட்சியிடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன், சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில் மதுரை தலத்தில் கிளி முக்கியத்துவம் பெற்று விட்டது.