நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :3575 days ago
பரமக்குடி: நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இக்கோயிலில் வைகாசி திருவிழா மே 12 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் இந்திர விமானம், வெள்ளி நந்தி, அன்ன, பூத, சிம்ம, யானை, ரிஷபம், கைலாசம், கிளி, குதிரை சேஷ, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிவலம் வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. சுவாமி பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், சவுந்தர்யநாயகி அம்மன் மற்றொரு தேரிலும் மாட வீதிகளில் வலம் வந்தனர். முன்னதாக விநாயகர் மற்றும் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வெவ்வேறு தேர்களில் எழுந்தருளினர். பக்தர்கள் சிவ, சிவ கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.