ரமலான் சிந்தனைகள்-5: நல்முறையில் உபசரிப்போம்
ஒருசமயம், நபிகளாரைக் காண ஒருவர் காத்து நின்றார். இதுபற்றி, நாயகத்திடம் தகவல் சொல்லப்பட்ட போது, “அவன் நல்லவனில்லை, இருந்தாலும் அவனை உள்ளே வரச்சொல்லுங்கள்,” என்றார். அவரிடம் பரிவுடன் பேசினார். அவர் சென்ற பிறகு, நாயகத்தின் துணைவி ஆயிஷா நாயகி அம்மையார், “அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?” என்று கேட்டார். அதற்கு நாயகம்,“இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான்,” என்று பதிலளித்தார். இன்னொரு சமயம் நாயகம், தன் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, அவரது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார். உடனே நாயகம் தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து விட்டு, அதில் அவரை அமரச்செய்தார். பின் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்து அமர வைத்தார். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, நாயகம் எழுந்துகொண்டு, அவருக்கு விரிப்பைக் கொடுத்தார். இதில் இருந்து அவரது கனிவான உபசரிப்பை உணரலாம். நமக்கு வேண்டியவரோ, வேண்டாதவரோ எல்லாரிடமும் கனிவு காட்ட வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.15 மணி