மேலைத்திருப்பதி கோவில் கும்பாபிஷேக பணி
அன்னுார்: மொண்டிபாளையம் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, ஜூலை 11ல் நடப்பதை முன்னிட்டு, திருப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. ‘மேலைத்திருப்பதி’ என்றழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் பழமையானது. இக்கோவிலில் புரட்டாசி மாத திருவிழாவில், பல மாவட்டங்களிலிருந்து பல லட்சம் பேர் பங்கேற்பர். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, மூலவர், வேணு கோபாலர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் சன்னதிகள், கோபுரங்கள், சுதைகள் பழுது பார்க்கப்படுகின்றன; அனைத்தும் வர்ணம் தீட்டப்படுகின்றன. சன்னதிகளில் பதிக்கப்பட்டுள்ள வேலைப்பாடு அமைந்த பித்தளை தகடுகள் மெரு கூட்டப்படுகின்றன. சுவாமி திருக்கல்யாண மண்டபம் பழுது பார்க்கப்பட்டு, வர்ணம் தீட்டப்படுகிறது. கொடி மரத்தை முழுமையாக புதிதாக அமைக்கவும், உட்பிரகாரத்தில் கற்கள் பதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 30 லட்சம் ரூபாயில் திருப்பணி நடந்து வருகிறது. கும்பாபி÷ ஷக விழா, ஜூலை, 8ம் தேதி மாலையில் விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. 9ம் தேதி வேள்வி பூஜையும், 10ம் தேதி, 81 கலசங்களில் திரு மஞ்சனமும் செய்யப்படுகிறது. 11ம் தேதி காலை 6:00 மணிக்கு விமானங்கள், மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. 30 பட்டாச்சார்யார்கள் வேள்வி பூஜை செய்கின்றனர். அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்துக்கு பின், ஏழுநிலை ராஜகோபுரம் கட்டும் பணி துவக்க திட்டமிட்டுள்ளனர்.