ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கோபுர சிற்பம் கீழே விழுந்தது!
திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரத்தில் உள்ள, சுதை சிற்பம் கீழே விழுந்தது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ளது, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில். இக்கோவிலை சுற்றியுள்ள வடக்கு, தெற்கு கோபுரங்களை, வீரநரசிம்மராயலு என்ற அரசர் அமைத்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன், கோவில் முன் இருந்த மகாகோபுரம் இடிந்து விழுந்தது. மீண்டும் அதை ஏற்படுத்த, கோவில் நிர்வாகம் செய்து வரும் முயற்சி இடையில் நிறுத்தப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி, கடை, வீடுகளை இழந்தவர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. நிபுணர் குழு, கோவி லில் உள்ள மற்ற நான்கு கோபுரங்களின் உறுதித் தன்மையை பரிசோதித்தது. ‘கோபுரங்களில் வளர்ந்து வரும் செடிகளை அகற்றி, விரிசல் ஏற்படுவதை தடுத்தால், இடிந்து விழுவதை தடுக்கலாம்’ என, அக்குழு தெரிவித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தற்போது நுழைவாயிலாக இருக்கும் பிக் ஷால கோபுரத்தில் உள்ள பெண் கடவுளின் சுதை வடிவ சிலையின் தலைபாகம் உடைந்து, கீழே விழுந்தது. அது, பக்தர் நடமாட்டம் இல்லாத பகுதியில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து, கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘கோபுர ங்களில் உள்ள செடிகளை அகற்றி, விரிசலை செப்பனிடும் பணிகளை, 15 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள, ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது. தற்போது, நல்ல நாட்கள் இல்லாததால், சுபமுகூர்த்த நாளில் செப்பனிடும் பணி துவங்கும்’ என்றனர்.