பரமக்குடியில் ஆடி அமாவாசை விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :3401 days ago
பரமக்குடி: ஆடிஅமாவாசை, ஆடிப்பெருக்கு மற்றும் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி, பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு விழாபாடு நடத்தப்பட்டது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளினார். தொடர்ந்து பெருமாள் ரதவீதிகளில் வீதிவலம் வந்தார். அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் காலை, மாலை தொடர்ந்து புனிதப்புளி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி ஹோமங்கள், அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் முத்தாலம்மன் கோயில், எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் ஆடிதிருக்கல்யாண உற்சவத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.