மொரட்டாண்டி கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு பாலாபிஷேகம்
ADDED :3584 days ago
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், குரு பகவானுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. குரு பெயர்ச்சியான நேற்று, குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசித்தார். அதையொட்டி, மொரட்டாண்டியில் உள்ள 27 அடி உயர பஞ்சலோக சனீஸ்வர பகவான் கோவிலில், நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், 1008 கொழுக்கட்டை நிவேத்தியம், சங்கடஹர சதுர்த்தி ஹோமம் நடந்தது. நேற்று காலை குருசாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர, ராசி, தட்சிணா மூர்த்தி ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து, குரு பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு கலச அபிஷேகம், 1008 கிலோ சுண்டல் நிவேதனம் நடந்தது. ஏற்பாடுகளை, சிதம்பர குருக்கள், கீதா சங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்திருந்தனர்.