கரிவரதராஜ பெருமாள் கோவில் மண்டல பூஜை நிறைவு!
அவிநாசி: அவிநாசி ஸ்ரீபூமிநீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று நடைபெற்றது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவில்களாக, பழமைவாய்ந்த ஸ்ரீபூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில், 11ல், கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று, காலை, 7.30 மணிக்கு அனுக்ஞை, விஷ்வக்சேன ஆராதனம், புண்யாஹம், கலச ஆவாஹணம், இரண்டு கோவில்களிலும் திருமஞ்சனம், பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றது. பகல், 12.30 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்தர் பேரையினர் செய்தனர்.