குன்றத்து கோயில்களில் ஆடிப் பூரத் திருவிழா
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, உற்சவர் சன்னதியில் (5.8.16) வெள்ளிக்கிழமை மாலை கோவர்த்தனாம்பிகை எழுந்தருளினார்.
அம்பாள் முன், வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி, பூஜைகள் நடந்தது. அரிசி, நெல், வெல்லம், வெற்றிலை உட்பட பலபொருட்களை வைத்து யாகம் வளர்த்து அம்பாளுக்கு காப்புக் கட்டப்பட்டது. படிகளில் வைக்கப்பட்டிருந்து நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள்முன்பு மூன்றுமுறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனிதநீர் அபிஷேகம் நடந்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில், மூலவருக்கு வளையல்கள் அணிவித்து, பூஜைகள் முடிந்து ஐந்துவகை சாதம் படைக்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு வளையல்கள் அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து வளையல்கள் அணிவித்து, லலிதா சகஸ்ர நாமம் பாடப்பட்டது. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலிலில் மூலவர் விசாலாட்சி அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, கலவை சாதம் படைத்து, லலிதா சகஸ்ர நாமம், கும்மி பாட்டு பாடப்பட்டது.