திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
நகரி: திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் தீமிதித்தனர். சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, சிந்தலப்பட்டடை கிராமத்தில், திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த, 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது.மதியம், 2:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடைபெற்று வந்தது. கடந்த, 5ம் தேதி, அர்ச்சுனன் தபசும், நேற்று முன்தினம் காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் நடந்தது.தொடர்ந்து திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். இரவு உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.