பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேர் திருவிழா: முதல்வர் நாராயணசாமி வடம் பிடித்தார்
வில்லியனூர்: வில்லியனுாரை அடுத்த தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேர் திருவிழாவை முதல்வர் நாராயணசாமி வடம் பிடித்து துவக்கி வைத்தார். வில்லியனுார் அருகே உள்ள தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேர் திருவிழா 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்று வந்த திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் கிராமம் முழுவதும் வீட்டு வாசலில் ஆடுகள் பலியிடப்படும். அந்த ரத்தத்தின் மீது தேர் செல்லுவது வழக்கம். அதன்படி நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கோவில் வாசலில் இரண்டு ஆடுகள் பலியிடப்பட்டன. தொடர்ந்து, ஒவ்வொரு வீடாக, சுமார் 800க்கும் மேற்பட்ட ஆடுகள் கிராமத்தில் பலியிடப்பட்டன. காலை 10 மணிக்கு துவங்கிய பிடாரி தேர் திருவிழாவிற்கு தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். முதல்வர் நாராயணசாமி வடம் பிடித்து, தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார். இன்று 9ம் தேதி பிற்பகல் 1:00 மணிக்கு மேல் ராமநாதபுரம் கிராமத்திற்கு சுவாமி செல்லுகிறது. இரவு 7:00 மணிக்கு மேல் மீண்டும் தொண்டமாநத்தம் கிராமத்தை வந்தடையும். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்தனர்.