போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்!
ராமேஸ்வரம்: சுதந்திர தினத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆக., 15ல் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவை பயங்கரவாதிகள் சீர்குலைக்கலாம் என்பதால் பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசுகளை மத்திய உளவுதுறை அலர்ட் செய்துள்ளது. தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப் படுகின்றனர். பாலத்தில் உஷார்: பாம்பன் ரயில் பாலம், தேசிய சாலை பாலத்தில் ரயில்வே போலீசார், மாநில சிறப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை இடுகின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்களை பாம்பன், ராமேஸ்வரம் சோதனை சாவடியில் வழிமறித்து ஆய்வு செய்த பின்னரே ராமேஸ்வரம் செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர்.