சிவாலயங்களில் பாடப்படும் திருப்பொன்னூஞ்சல் பாடல்!
சிவாலயங்களில் பள்ளியறை பூஜையின் போது பாடப்படும் திருப்பொன்னூஞ்சல் பாடல் இது. இதை மாணிக்க வாசகர் உத்தரகோசமங்கையில் பாடியுள்ளார்.
திருப்பொன்னூஞ்சல்
சீரார் பவளங்கால் முத்தம் கயிராக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப்
போரார்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ
மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன்தங்கி தித்தித்து அமுதூறித் தான் தெளிந்தங்கு
ஊன் தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கை
கோன்தங்கு இடைமருது பாடிக் குலமஞ்சை
போன்றங்கு அனநடையீர் பொன்னூசல் ஆடாமோ
முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர் குழாம்
பன்னூறு கோடி இணையோர்கள் தாம்நிற்பத்
தன்னீறு எனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூறு மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மாளிகை பாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலன் தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணை செய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர் குழாம்
நாணமே உய்ய ஆட்கொண்டு அருளிநஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தரகோச மங்கைக்
கோணார் பிறைச்சென்னீக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ
மாதாடு பாகத்தன் உத்தரகோச மங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணம் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ
உன்னற்கு அரியதிரு உத்திரகோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடு மணிமயில்போல்
என்னைத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ
கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேல் கொண்டு நமையாண்டான்
சீலம் திகழும் திருவுத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்பாடிப்
பூலித்து அகம் குழைந்து பொன்னூசல் ஆடாமோ
தெங்குலவு சோலைத் திருவுத்திரகோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம் பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
திருச்சிற்றம்பலம்